வரம் வேண்டும்
காற்றில் மிதந்து வரும்
பிரார்த்தனைப் பாடல்களை,
துறைக்கும் தேவாலயத்துக்குமான
சில அடி பயணத்தை,
வாழ்வைச் செதுக்கும்
இறைவார்த்தைகளை,
வகுப்பறையில் சிரிக்கும்
என் ரோஜா மலா்களை,
தமிழ்த்துறையை நிரப்பும்
இளம் சுகந்தத்தை,
ஆளுமையைக் கற்றுத்தரும்
அருட்சகோதரிகள் அருகாமையை,
இறைவனுக்கு நன்றி சொல்லும்
சில நொடி மௌனத்தை,
பரந்த நூலகத்தின்
பல்வகைப் புத்தகங்களை,
மென்மையாய் கடந்து செல்லும்
புன்னகைகளை
கண்ணீா் துடைக்க
ஓடி வரும் கரங்களை
வாழ்க்கையைக் கற்றுத்தரும்
நெஞ்சங்களைப்
பட்டாம்பூச்சியாய்
வானவில்லாய்
மின்னும் விண்மீனாய்
வண்ண மயிலிறகாய்
இளம் மொட்டுக்கள் நிறை இவ்வுலகம்
மீண்டும் பெற
வேண்டும் எனக்கொரு தனி வரம் !
வ.வள்ளியம்மாள்
இணைப்பேராசிரியா்
தமிழ் உயராய்வு மையம்
No comments:
Post a Comment